மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது? – அதிர்ச்சியூட்டும் தகவல்கள் July 20, 2014 TCC எம்.எச் 370 மலேசிய விமானம் காணாமல் போனதன் பின்னர் ஏற்பட்ட பரபரப்புக்கள் அடங்க முன்னரே தொடர்ச்சியாக மற்றுமொரு மலேசிய விமானம். பல கனவுகளோடு பயணித்த மொத்தம் 298 பேரைச் சுமந்து சென்ற இந்த விமானம் உக்ரைனில் வீழ்ந்து நொறுங்கி அத்தனை பேரையும் பலியெடுத்திருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? ஏன் இத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்தது? என்ற பல கேள்விகளுக்கு விடைதேட புறப்பட்டாலும் மாண்டவர்களை நாம் மீட்டு விடப்போவதில்லை என்பது மட்டும் உண்மை. இலங்கை நேரப்படி கடந்த வியாழக்கிழமை (17) அன்று இரவு 9 மணியளவில் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருந்த தகவல்களின் அடிப்படையில், மலேசிய ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 777 ரக எம்.எச்.17 பயணிகள் விமானம், கிழக்கு உக்ரைன் பகுதியில் வைத்து சுட்டு வீழத்தப்பட்டதில் 298 பேர் பலியாகியுள்ளனர். மலேசிய விமானம் விழுந்த இடம், கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது. அந்த பகுதி, கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் இராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் முக்கிய பகுதியாகும். மேலும், அப்பகுதி ரஷ்யாவுக்கு அருகே உள்ளது. எனவே, ரஷ்ய எல்லைக்குள் நுழைவதற்கு 40 கி.மீ. தூரத்துக்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது.எனவே, அந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் தெரிவிக்கிறார். தரையிலிருந்து பாய்ந்து சென்று வானிலுள்ள இலக்கை தாக்கும் ‘பக்’ ரக ஏவுகணை உதவியால் இவ் விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.இந்த ‘பக்’ ஏவுகணை நேட்டோ படைகளால் மிகவும் கொடூரமானதாக வர்ணிக்கப்படுகின்றது. இது, 22 ஆயிரம் மீற்றர் உயரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறனுடையது. 1970 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது.இதன்பிறகு பல வகைகளிலும் இந்த ஏவுகணை உருமாற்றப்பட்டது, செயற்திறன் அதிகரிக்கப்பட்டது. பல நாடுகளுக்கும் இந்த வகை ஏவுகணையை ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் பிரிவினைவாதிகளிடமும் இந்த ஏவுகணை உள்ளதாக உக்ரென் கூறுகின்றது. இந்த ஏவுகணையை பொறுத்தவரை மிகத் துல்லியமாக இலக்கை குறிவைத்து தாக்கும் வல்லமைமிக்கது. இப்படியான ஏவுகணைகளை ஏதாவது ஒரு நாட்டு படைகளால் மட்டுமே இயக்க முடியும். கிளர்ச்சியாளர்களால் அதை செய்ய முடியாது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், உக்ரைன் இராணுவத்தினரே விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு தங்கள் மீது பழி போடுவதாக தங்கள் மீதான குற்றச்சாட்டை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.உக்ரைனை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கிளர்ச்சியாளர் படைகளின் தலைவர் அலெக்சாண்டர் போரோடாய் இதுகுறித்து கூறுகையில், “மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில்தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எனவே, உக்ரைன் இராணுவம்தான் விமானத்தை வீழ்த்தியுள்ளது என்பது உறுதி” என்றார்.ஆசிய கண்டத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமாயின், உக்ரைன் வான் எல்லை வழியாக பறந்து செல்வது தூரம் குறைந்த பாதையாக கருதப்படுகிறது. உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பல்வேறு உள்நாட்டு விமானங்களை இப்பகுதியில் ஏற்கனவே சுட்டுவீழ்த்தியிருந்ததால், இந்த பாதையை சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ஆபத்து நிறைந்த பாதை என்பதை அறிந்திருந்தும் 298 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் அவ்வழியாக சென்றது ஏன்? என இந்த விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு துறை பிரபல பேராசிரியர்களில் ஒருவரான நார்மன் ஷேங்க்ஸ், “உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு மேலே உள்ள வான் எல்லையில் பறப்பதை தவிர்க்க வேண்டும் என்றே அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தல் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. உலகின் அனைத்து விமான நிறுவனங்களும் எரிபொருள் மற்றும் நேரத்தை சிக்கனப்படுத்தும் பாதைகளை தேர்ந்தெடுப்பதையே விரும்புகின்றன. கிழக்கு உக்ரைனின் வான் வெளியின் மீது பறப்பது ஆபத்து நிறைந்தது. அவ்வழியே பறக்க வேண்டாம் என்று பிரத்தியேகமாக எச்சரித்திருந்தால் அவ்வழியே பறப்பதை விமானங்கள் தவிர்த்திருக்கும்.30 ஆயிரம் அடிகளுக்கு உட்பட்ட உயரத்தில் அந்த விமானம் பறந்த நிலையில் அதன் உருவ அமைப்பை வைத்தே, அது இராணுவ விமானம் அல்ல பயணிகள் விமானம் தான் என்பதை கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கக்கூடும். பயணிகள் விமானம் என்று தெரிந்த பின்னரும் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்” என்றார். விமானத்தின் கறுப்புப் பெட்டியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அது தங்கள் வசம் இருப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அந்த கறுப்பு பெட்டியை ஆராய்ந்தால் விமானம் விபத்துக்குள்ளானதா? ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதா? என்று தெரியவரும். எது எவ்வாறானாலும் இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்ளடங்கலாக 280 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகள் உட்பட மொத்தம் 298 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பயணிகளில் 154 பேர் நெதர்லாந்து பிரஜைகள். 43 பேர் மலேசியர்கள், அவுஸ்திரேலியர்கள் 27 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் 12 பேர். பிரித்தானியர்கள் 9, ஜேர்மனியர்கள் 3, பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 3, கனேடியர் ஒருவர், 4 பேர் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் அந்த விமானத்தில் பயணிக்கவில்லை என அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் பணியாற்றிய ஊழியர்களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்றும் தெரியவந்துள்ளது. அவரது பெயர், ஏஞ்செலின் பிரமிளா ராஜேந்திரன் (வயது 30). விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு நனவாகி மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.இந்த செய்தி கேள்வியுற்றதிலிருந்து, “சிறு வயதிலிருந்தே விமானத்தில் பறக்க வேண்டும் என்பதை கனவாகக் கொண்டிருந்த நிலையில், அந்த கனவே அவரை கருகச் செய்து விட்டதே” என அவரது குடும்பத்தினரும், உறவுகளும் கதறி அழுகிறார்கள்.இதுபோன்று, பலரின் கனவுகளும் இன்று கருகிபோய்விட்டன. இதனிடையே, மேற்படி விமானத்தில் பயணித்த கோர்பேன் என்ற இளைஞரின் பேஸ்புக் பதிவு பலரின் மனதையும் உருக்கியுள்ளது.தான் பயணிக்கும் விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என்பதை அறியாமலேயே, விமானம் புறப்பட சற்று முன்னர் அந்த விமானத்தை புகைப்படமெடுத்து அதில், “இந்த விமானம் கடத்தப்பட்டால் இது தான் அதன் உண்மையான புகைப்படம்” என நகைச்சுவை உணர்வுடன் பேஸ்புக்கில் கருத்தை பகிர்ந்திருந்தார்.