வவுனியாவில் நீர் மட்டம் அதிகரிப்பு; கந்தசாமிநகர், கிறிஸ்தவகுளம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம்! December 28, 2014 News வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் வான்கதவுகளை மூன்று அடி உயரத்திற்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கந்தசாமிநகர், கிறிஸ்தவகுளம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் பீ.சூரியராஜ் தெரிவிக்கின்றார். ஆகவே, குறித்த பகுதிகளிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பாவற்குளத்தை அண்மித்த தாழ்நிலப் பகுதியிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் உதவிப் பணிப்பாளர் பீ.சூரியராஜ் கூறினார். இதனிடையே சீரற்ற வானிலையால் வவுனியாவில் வெள்ளத்தால் மூழ்கிய வீதிகளில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.