முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயாரான புஸ்பாம்பாள் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்ட நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ,வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், மேரிகமலா குணசீலன், சிவமோகன் ,நாங்கள் அமைப்பைச் சேர்ந்த சஜீவன்,மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக அந்தோணி மார்க் மற்றும்  சகாயம் ,முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக நவரட்ணம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
நிகழ்வில் முக்கியகட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரப் படமொன்றில் தனது மகள் நிற்பதாக ஒரு தாய் கூறி எப்படியாவது தன் மகளை மீட்டுத் தாருங்கள் என கதறி அழுதது அங்கிருந்த அனைவர் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது.
நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிக்கும் பொருட்டும் வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கான பிரதியையும் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையளித்தனர்.