மயூரன், சான் உள்ளிட்ட 8 பேருக்கு மரணதண்டனையை நிறைவேற்றியது இந்தோனேஷியா April 29, 2015 News சர்வதேச சமூகத்தின் தீவிர அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல், இந்தோனேஷிய மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு கைதிகளின் மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளது. மத்திய ஜாவா பிராந்தியத்திலுள்ள சிலாகெப் நகருக்கு அருகில் இருக்கும் நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததன் மூலம் எட்டு பேரினதும் மரணதண்டனைகளை நிறைவேற்றியதாக இந்தோனேஷிய சட்டமா அதிபரது அலுவலகத்தைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஸெய்னுல் ஆப்தீன், அவுஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான், பிறேசில் நாட்டவரான ரொட்ரிக்கோ குலார்தே, நைஜீரியர்களான சில்வெஸ்டர் வொலிசே, ரஹீம் சலாமி, ஒக்வுதுலி ஒயரான்சே, மார்ட்டின் அன்டர்சன் ஆகியோர் மீதான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பிலிப்பைன்ஸ் பெண்மணியான மேரி ஜேன் வெலோசோவின் மரணதண்டனை கடைசி நிமிடத்தில் ரத்துச் செய்யப்பட்டது. போதைப்பொருள் பொதியை கொண்டு செல்லும் பெண்ணாக மேரியை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் பெண் பிலிப்பைன்ஸ் பொலிசாரிடம் சரண் அடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகத் தெரிகிறது. தமது பூதவுடல்கள் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென மயூரனும், சானும் கோரிக்கை விடுத்திருந்தார்கள். அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற இந்தோனேஷிய அரசாங்கம் இணங்கியதாக சட்டமா அதிபர் அலுவலகத்தின் பேச்சாளர் ரோனி ஸ்பொன்டானா தெரிவித்தார். கடந்த ஜனவரி 18ஆம் திகதி நெதர்லாந்து, பிரேசில், நைஜீரியா, வியட்னாம், மாலாவி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஆறு பேர் மீதான மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தபடியாக துப்பாக்கி வேட்டுக்கள் மூலம் எட்டுப் பேர் மீதான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.