பாலா அண்ணா நினைவுசுமந்த 9வது நினைவேந்தல் நிகழ்வு December 15, 2015 News, TCC தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, திங்கட்கிழமை 14.12.2015, மாலை 18:30 மணி தொடக்கம் 20:30 மணி வரை தமிழர் வள ஆலோசனை மையத்தில்உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இளையோர் சார்பில் செல்வி அபிநயா பொதுச் சுடரினைஏற்றி வணக்கநிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கமும் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வுகளாக பாலா அண்ணா நினைவு சுமந்த தாயக கானங்கள், விவரணம் , பேச்சு, புதுவை இரத்தின துரையின் கவிதை என்பன இடம்பெற்றன. தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட வரலாற்றில் தனக்கென தனியான ஒரு இடத்தை அமைத்து சர்வதேச அரசியல் சட்டங்களுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி அதன் ஊடாக தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் உண்மையான நிலைப்பாட்டினையும், அதன் நியாயத் தன்மையையும் உலக அரங்கில் ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்த இராஜதந்திரியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஒன்பதுஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று அவரை நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதி மொழி ஏற்புடனும், வணக்க நிகழ்வு நிறைவடைந்தது.